சென்னை: மருத்துவமனைகளுக்கு இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்
சென்னையில் இன்று மதல் ஆன்லைன் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் தொற்று தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவீர் மருந்து சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி சில தினங்களுக்கு முன் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, ரெம்டெசிவிர் மருந்துக்காக முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று (மே 21) சென்னை, அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கு மூலம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்களுக்கு, உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.