செங்கல்பட்டு அரசினர் கலை கல்லூரியில் பொன்விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு அரசினர் இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய 50வது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு இராட்டின கிணறு பேருந்து நிலையம் அருகே உள்ல அரசினர் இராஜேஸ்வரி வேதாச்சலம் கலை கல்லூரியானது கடந்த 1970-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகாலம் முடிவடைந்ததை முன்னிட்டு, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய பொன்விழா கொண்டாட்டமானது இன்று செங்கல்பட்டில் உள்ள தனியார் மஹாலில் நடந்தது.
50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மருத்துவமனை மருத்துவ கல்லூரியுடன் இணைந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில் ரத்ததானமுகாம் நடைபெற்றது. இதனை வில்லிவாக்கம் உதவி ஆணையர் சகாதேவன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பங்குபெற்ற கண்தான முகாமை சென்னை எவர்வின் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் புருஷோத்தமன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இம்முகாமில் 200-க்கு மேற்பட்டோர் கண்தானம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு தனியார் மஹாலில் பொன்விழா துவக்கப்பட்டது. தொழிலதிபர் மதுசூதனன் மற்றும் டாக்டர் ரத்தினம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு T.P.ரங்கமாறன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி வளாகத்தில் உலக வெப்ப மயமாக்குதலை குறைக்கும் சமூக நோக்கத்தோடு மரம் நடும் விழா நடத்தப்பட்டது.
பின்னர் கலை நிகழ்ச்சிகளோடு துவங்கிய இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு அளித்தும், இந்நாள் மாணவர்களுக்கு 200 நாற்காலிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.