அரியலூரில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் நலத்திட்ட உதவிகள்
அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒற்றுமை திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நடைபெற்று வருகிறது.
இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தேசத்தலைவர்களை போற்றும் வகையிலும், விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி நடத்தி, அக்கண்காட்சியில் அரியலூர் மாவட்டத்தில் அறிந்த மற்றும் அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தறித்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, தமிழ்நாடு மாநில் ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊகர வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர், இந்த சுதந்திர தின அமுதப் பெருவிழா 24.03.2022 அன்று தொடங்கி 31.03.2022 வரை நடைபெறுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் மாலை நேரங்களில் கலை குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 31.03.2021 வரை மாணவ, மாணவிகள் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் நடைபெறும். எனவே, அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்து, சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாறுகள் மற்றும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 75-வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவினையொட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஹாக்கி போட்டியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.