அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது என கலெக்ர் ரத்னா தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இணையதளம் அரசு உருவாக்கியுள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக ~தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal' (www.tnprivatejobs.tn.gov.in) வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இவ்விணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்து அப்பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்கிறது. வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம்" மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்கி தரப்பட்டுள்ளது.
எனவே, இச்சேவையை அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்களும் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.