மணல் குவாரி திறக்க கோரி சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி திறக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் தொழிலாளர்கள் காரைக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்- மாவட்டம் தா.பழூரை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளன. இந்த மாட்டு வண்டி உரிமையாளர்களின் குடும்பங்கள் இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ வேண்டி உள்ளது. இவர்கள் அனைவரும் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி திறக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அடிக்கடி இவர்கள் மாட்டுவண்டியில் திருட்டுத்தனமாக மணல்லோடு எடுத்து செல்லும்போது ரோந்து வரும் போலீசார் வழக்குபதிவு செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்வதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்படுகிறது.
எனுவே மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நிரந்தரமாக மணல் குவாரி திறக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் தொழிலாளர்கள் காரைக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாட்டுவண்டிகளை சாலைகளின் ஓரத்தில் நிறுத்தசொல்லி போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்துவருகின்றனர்.