நெல்லை மாவட்டத்தில் 12 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3500 மாணவர்கள் பங்கேற்பு
நெல்லை மாவட்டத்தில் மாநகர் முழுவதும் 12 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 3553 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர்.
HIGHLIGHTS
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நெல்லை மாவட்டத்தில் 12 மையங்களில் நடைபெற்றது. 3500 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) மூலம் கம்பைன்டு ஸ்டேட்டிஸ்டிகல் சப் ஆர்டினேட் போட்டி தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் அன்று முழு ஊரடங்கு என்பதால் அத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 11ஆம் தேதி இன்று நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்ததைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுதும் தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகர் முழுவதும் 12 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 3553 மாணவர்கள் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். தற்போது கொரனோ 3ம் அலை மற்றும் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதன்படி தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் நுழைவாயிலில் தேர்வகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகலும் இத்தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.