/* */

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் தீர்த்தவாரி கண்டருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் வைகுந்த ஏகாதசி விழாவில் இன்று நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் தீர்த்தவாரி கண்டருளினார் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

பூலோக வைகுந்தம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 4-ந்தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான 13-ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுந்த ஏகாதசி திருநாள் அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 7-ஆம் நாள் திருக்கைத்தல சேவையும், 8-ஆம் நாள் திருமங்கைமன்னன் வேடுபறி வைபவமும் நடைபெற்றது. 10-ஆம் திருநாளான இன்று தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு பரமபதவாசல் கடந்தார். காலை 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். தீர்த்தவாரியின் போது நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராட வைத்தனர். அதனை நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.


இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளித்தனர். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார்.

இரவு 11 மணி முதல் நாளை (24-ந்தேதி)அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறம். காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளிப்பார். பின்னர் காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை மறுநாள் (25-ந்தேதி) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறும்.

அதன்பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணிவரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறை நடைபெறும். அத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Updated On: 23 Dec 2021 12:45 PM GMT

Related News