வடிகால் வசதி அமைத்துத் தரக்கோரி மாநகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது வார்டுக்குட்பட்ட பிஅன்டி காலனி, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர், செல்வநாயகபுரம், கோக்கூர், பாரதி நகர், புஷ்பா நகர், நிகிலேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி, சாலை வசதி இல்லாததால் மழை காலங்களில் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதனால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலைகளாக உள்ளது. தொடர்ந்து மழை காலங்களில் இப்பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் முறையான வடிகால் வசதி செய்து பக்கிள் ஓடையில் இணைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் மூன்றாவது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் மாநகராட்சிக்கு வீட்டிலிருந்து தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடை பெற்ற போராட்டத்தில் ஆயிரம் தபால்கள் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தரவில்லையென்றால் பொதுமக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.