தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற நவம்பர் 8-இல் சிறப்பு முகாம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற நவம்பர் 8 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரசு மற்றும் தனியார் வசம் உள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சேமிப்பு கிட்டங்கிகள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை விற்கும் மருந்தகங்கள், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் போக்குவரத்தாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து வகை உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் அந்த சான்றிதழ் உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பெற்றிருந்த உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் காலாவதியாகிவிட்டால், அந்த உரிமம் இல்லாததாகவே கருதி, தொழிலைத் தொடர்ந்து நடத்த இயலாது.
மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவுத் தொழில் புரிவது என்பது, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 63-இன் கீழ் தண்டனைக்குரியதாகும். என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை வணிகர்களின் தங்களது இருப்பிடத்தில் இருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணைய மையத்தில் இருந்தோ https://foscos.fssai.gov.in என்ற இணையத்தளம் மூலமாக கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
ஒரே முறையில் ஐந்து ஆண்டுகள் வரை செல்லத்தக்க வகையிலும் உரிய கட்டணம் செலுத்தி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், மாவட்டத்தில் இன்னும் கிட்டத்தட்ட 15 சதவீத உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகர்கள் உரிமம் பெறவில்லை என்று அறியப்படுகிறது.
எனவே, உணவு வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ஒரு வாய்ப்பாக, "உணவு பாதுகாப்பு உரிமம் மேளா" என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்த உணவு பாதுகாப்புத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் நவம்பர் 8 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள ஆல் இந்தியா சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் ஹாலில் நடைபெற உள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதிழ் பெறாத வணிகர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், 1.12.2022 முதல் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாத வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதிழ் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண விபரம் பின்வருமாறு:
உற்பத்தியாளர்கள் தங்களது நிறுவன வளாகத்தின் வரைபடம், உரிமையாளர்கள் பட்டியல், இயந்திர விபரங்கள், தண்ணீர் பரிசோதனை அறிக்கை, அடையாள அட்டை, வளாகத்திற்கான உரிமை ஆவணம், கம்பெனி பதிவு ஆவணம், ரீகால் ப்ளான் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
ஒரு நாளைக்கு 1 மெட்ரிக் டன் வரை உள்ள தயாரிப்பாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு கட்டணம் ரூ. 3000 ஆகும். ஒரு நாளைக்கு 2 மெட்ரிக் டன் வரை உள்ள தயாரிப்பாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு கட்டணம் ரூ. 5000 ஆகும். ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்திற்கு கீழ் விற்றுக்கொள்முதல் உள்ளவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு கட்டணம்: ரூ.100 ஆகும்.
உணவு வணிகர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்த சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுக் கொள்ளவும், இதுதொடர்பான மேலும் தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2900669 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.