பிரதமரின் கல்வி உதவித் தொகை: இளம் சாதனையாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
Prime Minister Scholarship Scheme: இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இளம் சாதனையாளர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் 3093 மாணவ, மாணவியர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசால் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயில்பவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மத்திய அரசால் தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற இயலும்.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு அதிக பட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை மூலம் 29.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் https://yet.nta.ac.in என்ற இணையதன முகவரியில் உள்ள உரிய படிவத்தில் மட்டுமே பூர்த்தி செய்து உரிய ஆவணங்களான மின்னஞ்சல் முகவரி, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச் சான்று, வகுப்புச்சான்று, ஆதார் அட்டை , கைபேசி எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், மின்கையொப்பம் ஆகியவற்றுடன் பதிவேற்றம் செய்து இணையதளம் வாயிலாக 10.08.2023-க்குள் விண்ணப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கு தேவையான விவரங்களை https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் நன்கு அறிந்து பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையத்தில் முழுமையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பின் அவ்விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஏற்படின் 12.08.2023 முதல் 16.08.2023 வரை கால அவகாசம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.