பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாபநாசம் அணையில் இருந்து பிசானசாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாய பெருமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்தேக்கங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு மேடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர் ), நதியுன்னி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (6000 ஏக்கர்), பாளையங்கால்வாய் (9500 ஏக்கர்) திருநெல்வேலி கால்வாய் (6410 ஏக்கர்), மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (12762 ஏக்கர்), மருதூர் கீழக்கால் கால்வாய் (7785 ஏக்கர்), தெற்கு பிரதான கால்வாய் (12760 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் (12800 ஏக்கர்), ஆகியவைகளின் கீழ் உள்ள 86,107 ஏக்கர், நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 31.03.2023 முடிய 148 நாட்களுக்கு தண்ணீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும்.
இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.
தமிழகத்தில் நெல் கொள் முதல் நிலையங்கள் தேவைகேற்ப திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் நதிநிர் இணைப்பு கால்வாய் மூலம் 3400 கனஅடி வீதம் வறன்ட பகுதிகளாக நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், உடன்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் என்ற திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அதன் பிறகு இந்தத் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நதிநீர் குடிநீர் இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 369 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தத் திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று 2023 ஆம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடையும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.