மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பார்.. அமைச்சர் கீதாஜீவன் தகவல்…
மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்றி தருவார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் சமூக நலத்துறை மூலம், திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்கிடும் பொருட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் இணைந்து 37 லட்சம் குழந்தைகளுக்கு உயரம் மற்றும் எடை சரிபார்க்கப்பட்டு உள்ளது.
கூடுதல் சிகிச்சை தேவைப்படும் 47000 குழந்தைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சமூக நலத்துறை மூலம் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து மட்டும் குறைபாடு உள்ள குழந்தைகள், குழந்தை பெற்று 6 மாதமான தாய்மார்கள் ஆகியோருக்கு ஆரோக்கிய பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை உறுதி செய்யக்கூடிய சத்து இனிப்பும் வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்களின் நலனுக்காக தேவைப்படும் அத்தனை திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
வாக்குறுதியாக அளித்த திட்டங்கள் மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை எல்லாம் பட்ஜெட்டில் அறிவித்து முதல்வர் நிறைவேற்றி தருவார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியினை முதல்வர் நடத்தி வருகிறார்.
நரிக்குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை முதன்முதலில் வழங்கினோம். பின்னர், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இன்றைக்கு நரிக்குறவர்களுக்கு வீடுகளும் கட்டிக்கொடுக்கப்படுகிறது. அதேபோல் திருநங்கைகளுக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்காக கிரீன் அம்மோனியா நிறுவனம், பர்னிச்சர் பூங்கா தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் அதிக வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் பெறும் வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.