தூத்துக்குடி மாவட்டத்தில் 849 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 54.93 கோடி கடனுதவி வழங்கல்...
தூத்துக்குடி மாவட்டத்தில் 849 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 54. 93 கோடி கடனுதவியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இன்று ஒரே நாளில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி கடனுதவிகளை வழங்கினார். மேலும், சிறப்பாக செயல்படும் மகளிர் குழுக்களுக்கு விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடன் உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள 849 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.54.93 கோடி வழங்கப்பட்டது. மேலும், 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ. 474 கோடி வங்கி பெருங்கடனும், 27 சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ. 40.50 லட்சமும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 33 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 லட்சமும் உள்பட மொத்தம் 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 60.70 கோடி கடனுதவியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.