இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி? காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை
இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து இளைஞர் நீதி குழும முதன்மை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவியாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்று தருவதற்கும், குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காகவும் குழந்தைகள் நல காவல் அலுவலர் என்ற குழு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வளார்கள் குழந்தைகள் நல காவல் அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (25.04.2023) தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமம் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளருமான ஜெயராம் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும் காவல்துறையினருக்கு இளைஞர் நீதி குழுமத்தின் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி இளைஞர் நல நீதி குழுத்தின் உறுப்பினர்கள் ஜான் சுரேஷ், உமா தேவி மற்றும் நன்னடத்தை அதிகாரி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்