சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் பிரச்னையா? குறைகளை தெரிவிக்க வாய்ப்பு
சமையல் கியாஸ் இணைப்பில் பிரச்னைகள் இருந்தால் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சமையல் கேஸ் இணைப்பு வைத்திருப்போருக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 27.04.2023 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
எனவே, எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
கூட்டத்தில், பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாது இருத்தல் குறித்து தெரிவிக்கலாம்.
மேலும், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணலாம். எனவே, பொதுமக்கள் இந்தக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.