இலங்கைக்கு கடத்த முயன்ற 5 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி க்யூ பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை.
HIGHLIGHTS
இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று அதிகாலை திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரையில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக ஒரு லோடு வேன் நின்று கொண்டிருந்தது. மேலும் கடலில் நின்ற படகில் விராலி மஞ்சள் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அப்போது அங்கு நின்ற வேனில் இருந்து மஞ்சள் மூடைகள் மற்றும் பீடி இலை மூடைகளை நாட்டு படகிற்கு ஏற்றிக்கொண்டிருந்த திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியை சார்ந்த ப்ரூக் மகன் உமர்(40) என்பவரை கைது செய்து, அவரிடம் நடைபெற்ற விசாரணையில் இச்சரக்குகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு நாட்டு படகில் கடத்த இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த க்யூ பிரிவு அதிகாரிகள் படகில் இருந்த 840 கிலோ எடை கொண்ட 28 மூடை மஞ்சள் மற்றும் 420 கிலோ எடை கொண்ட 14 மூடைகளை கைப்பறிறினர். இவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சரக்குகள் தாளமுத்து நகர் ஜாகீர் உசேன் பகுதியை சார்ந்த முகம்மது தௌபிக் மகன் முகம்மது அசாரூதீன் என்பவருக்கு சொந்தமானது என்பது கியூ பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.