திருவாரூர்: மழை பாதிப்பு பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை கூரை வீடுகளை பொறுத்தவரை 1287 வீடுகள் பகுதியாகவும், 34 வீடுகள் முழுமையாகவும்,ஓட்டு வீடுகளை பொறுத்தவரை 182 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளது.
அதேபோல் கால்நடை இறப்புகளை பொறுத்தவரை 56 பசுமாடுகள்,1 எருமை மாடு, 28 கன்றுகள்,61 ஆடுகள் என மொத்தம் 146 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. நிவாரண முகாம்களை பொறுத்தவரை திருவாரூர் வட்டம் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப ஆரம்ப பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 28 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார்,மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஐநூற்று பிள்ளையார்கோவில்தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியினை பார்வையிட்டனர். பின்னர் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டு வருகிறதா என்பதை கேட்டறிந்தனர். தொடர்ச்சியாக நன்னிலம் வட்டம் குருங்குளம் வாஞ்சியாற்றின் கரை பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், பொதுப்பணித்துறை (கட்டிட பராமரிப்பு) மோகனசுந்தரம், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன் , திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.