வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தற்கொலை: கணவன் – மாமனார் கைது
தஞ்சாவூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார்,35,. இவருக்கும் உதயா,32,. என்பவருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் தரணிதரன் என்ற மகன் உள்ளார். திருமணமான சில மாதங்களில், முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார்.
அதன்பின்னர், முத்துக்குமாரின் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர், 60, தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து, உதயாவிடம் வரதட்சணை கேட்டு அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், உதயா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். எனினும், வழக்கம் போல் உதயாவை முத்துக்குமார் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், உதயாவின் கணவர் முத்துக்குமார், கடந்த ஜனவரி மாதம் நாடு திரும்பிய நிலையில், மீண்டும் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இதில் 7 மாதம் கர்ப்பிணியான இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இச்சூழலில், கடந்த 9ம் தேதி, உதயா தற்கொலை செய்துகொண்டதாகக்கூறி, சந்திரசேகரின் உறவினர்கள் சிலர், அவருக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்து பார்த்த போது, மகளின் உடலில் தீக்காயங்கள் அதிகளவில் இருப்பதாகவும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, தமிழ்பல்கலைகழக போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் முத்துக்குமார், அவரது தந்தை மனோகர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.