பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழ மன்னன் காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வெட்டப்பட்ட கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமாகவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் கரைகளின் இரண்டு பக்கமும், மரங்களும் நடப்பட்ட உள்ளன. இந்நிலையில் இதனை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 5,000 மரங்களைக் கொண்ட குறுங்காட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் மரம் நடவேண்டும், ரத்ததானம் போல் மரம் நடுவதை மாணவர்கள் பின்பற்றிட வேண்டும் என்றார். 9 வது முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுமா என்கிற கேள்விக்கு, மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முதல்வர் முடிவு செய்வார். அரசுப்பள்ளிகளை இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும்.
அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும், அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும் என்றவர், ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் அனுமதி வழங்கப்படுவது குறித்து கண்காணிக்கப்படும் என்றவர், கள்ளபெரம்பூர் ஏரியை மேலும் மேம்படுத்த முதலமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.