பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி உயர்வு: தமிழ்நாடு பேரூராட்சிகள் பணியாளர் சங்கம்
பேரூராட்சிகளில் பணிபுரியும் கீழ்நிலை பணியாளர்களுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு பேரூராட்சிகள் பணியாளர் சங்கம் கோரிக்கை.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில பொது குழு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதிய குழு பரிந்துரையின்படி பேரூராட்சிகளில் பணியாற்றும் கீழ்நிலை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதிய விகிதம் கடந்த கால ஆட்சியில் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழக அரசு கைவிட்டு மீண்டும் பழைய ஊதியத்தை வழங்க வேண்டும்.
கீழ்நிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு 20 சதவீதம் காலி பணியிடங்களில் அரசாணை இருந்தும் கூட பல மாவட்டங்களில் முறையாக அமுல்படுத்தப்படாததால் தகுதி பெற்ற கீழே பணியாளர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி எந்த ஒரு பதவி உயர்வு இல்லாமலே ஓய்வு பெறக்கூடிய அவல நிலை நிலவி வருகிறது.
தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கீழ்நிலை பணியாளர்களுக்கு அதற்கான பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.