தென்காசி நகராட்சி சந்தை துப்புரவுப்பணிகள் முடக்கம்..! வியாபாரிகளே குப்பைகள் அகற்றம்..!
நகராட்சி சந்தையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தங்களது பகுதி குப்பைகளை வியாபாரிகளே சுத்தம் செய்துகொண்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ளது, தென்காசி நகராட்சி தினசரி சந்தை. இந்த காய்கறி சந்தை தினமும் காலை முதல் மதியம் ஒரு மணி வரை செயல்படும்.
புதன்கிழமை தோறும் முழு சந்தையாக காலை முதல் இரவு வரை செயல்படும். இங்கே வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகளை தினமும் நகராட்சி பணியாளர்கள் அகற்றுவார்கள். ஆனால் கடந்த ஒரு வார காலமாக இங்கு உள்ள காய்கறிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் எடுக்க வரவில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாற்றுகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் தினசரி சந்தைக்கு மாலையில் சாலையோர வியாபாரிகள் கடை அமைக்க தங்கள் பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளையும் சுத்தம் செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஓரமாக வைத்துள்ளனர்.
இப்பகுதியில் வாரம் ஒரு முறை கடை அமைக்க நகராட்சியிலிருந்து 100 ரூபாய் வசூலிக்கின்றனர். மேலும் நகராட்சிப் பணியாளர்கள், பணம் வாங்குவதுதான் காய்கறிகளை விலை இல்லாமல் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் இதனை சுத்தம் செய்ய அழைத்தால் வர மறுக்கின்றனர். இதனால் வேறு வழி இல்லாமல் நாங்களே சுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நகராட்சியை தொடர்பு கொண்ட போது இன்று துப்புரவு பணியாளர்கள் அனைவரும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இன்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.
வியாபாரிகள் ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படவில்லை என்று தெரிவித்த நிலையில் நகராட்சி அதிகாரிகளின் பதில் குழப்பமாக உள்ளது என்று வியாபாரிகள் புலம்பினர்.