வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: உணவின்றி வாடும் பொதுமக்கள் குழந்தைகள்
மழை நீர் சூழ்ந்ததால் காளையார்கோவில் ஒன்றியம் பாகனேரி மு.க.நகர் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
HIGHLIGHTS
வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் சமைக்க முடியாமல் குழந்தைகளுடன் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தினசரி இரவு பகலாக பெய்து வருவதால் ஏரி குளங்கள் கண்மாய் நிரம்பி உபரி நீர் கலிங்கிகள் வழியாக வெளியேறிச் செல்கிறது. இதனால், சாலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளிலும் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் மாறிவிட்டது. மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே மழையினால் வீடுகளும் இடிந்து விழுகின்றன.
இந்நிலையில், காளையார்கோவில் ஒன்றியம், பாகனேரி மு.க.நகர் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பெய்து வரும் மழையினால், குடியிருப்பு அருகே உள்ள சேந்துரணிகுளம் நிரம்பி தண்ணீர் வெளியேற முடியாமல் இருந்து வருகிறது. குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற தற்காலிக பாலம் அமைத்தும் பயனில்லாத காரணத்தால், குளத்திற்கு செல்லும் மழை நீரானது குடியிருப்புகளுக்குள் புகுந்து குளம் போல தேங்கி நிற்கிறது.
மேலும், பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வீட்டில் உணவு சமைக்கவும் முடியாமல் குழந்தைகள் பட்டினியுடன் இருப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்தால், எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.