/* */

ஏற்காட்டில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஜீப் மீது லாரி மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டம் ஏற்காடு பாறைக்கடை கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன், தனக்கு சொந்தமான ஜீப்பில் காபி கொட்டை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தன் என்பவருடன்,ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் ஆத்துப்பாலம் என்னும் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கலவை போடும் லாரியை கண்டு, ராமச்சந்திரன் ரோட்டின் இடது புறம் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், எதிரே வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜீப்பின் மீது வேகமாக மோதியது. சிறிது தூரம் சென்று லாரி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற ராமச்சந்திரன் மீது, லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற கோவிந்தன் முதுகு எலும்பு முறிந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரபு விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ராமச்சந்திரனின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 6:09 AM GMT

Related News