Begin typing your search above and press return to search.
சேலம் - கொரோனாவால் இறந்தவர்களுக்கு முறையாக சான்று தருவதில்லை என புகார்
கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், முறையாக சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக, ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட சிறு குறு தொழிற்சங்கத்தினர், இது தொடர்பாக, தமிழக முதலமைச்சருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு ரூ 5 லட்சம் வைப்புத்தொகை மற்றும் கல்விக்கான உதவியை அரசே ஏற்கும் என்ற தமிழக முதல்வருக்கும்; ரூபாய் 10 லட்சம் வைப்புத்தொகையை அறிவித்த பாரத பிரதமருக்கும், சேலம் மாவட்ட சிறு குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
அதேவேளையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களுக்கு, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் வழங்கப்படும் சான்றிதழில், நிமோனியா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதுபோன்று சான்றிதழ் வழங்கப்படுவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு, அரசின் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதுதொடர்பாக, குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழக்க நேரிடும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச்சான்றிதழில் கொரோனா தொற்று பாதித்து இறந்ததை குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க வேண்டும் என்று, முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.