ஜாவத் புயல் எதிரொலி: விஜயவாடாவுக்கு விரைந்த தேசியபேரிடர் மீட்புப்படை
ஜாவத் புயல் காரணமாக அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இருந்து தேசியபேரிடர்மீட்பு படையினர் மீட்பு பணிகளுக்கு விஜயவாடா புறப்பட்டனர்
HIGHLIGHTS
அந்தமானில் உருவான காற்றழுத்தம் தீவிர காற்றழுத்தப்பகுதியாக மாறியது.அது மேற்கு ,வடமேற்கு திசைக்கு நகர்ந்து அடுத்த 24மணிநேரத்திற்கு ஜாவத் புயலாக மாறி வலுப்பெற்று மத்திய வங்கடல் நகர்ந்து செல்கிறது.
மேலும், புயலானது வடமேற்கு திசைக்கு நகர்ந்து சற்று வலுபெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை யொட்டி நாளை கரையைக் கடக்கிறது.
இதனால், தென்கிழக்கு அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்தமழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து மேற்படி பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மீட்புப் பணிகளுக்காக, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசியப் பேரிடர் மீட்புப்படை, 4வது பட்டாலியனிலிருந்து 20 வீரர்கள் கொண்ட 4 குழுவினர் தங்கள் மீட்புப்பணி உபகரணங்களுடன் விஜயவாடாவிற்கு விரைந்துள்ளனர்