மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன் காணப்படும் கடல்பகுதி
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் துர்நாற்றத்துடன் கடல் நுரையாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
மன்னார் வளைகுடா கடல் நீரில் திடீரென ஏற்பட்ட துர்நாற்றத்தால் கடல்நீர் நுரையாக காட்சி அளிப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபகாலமாக மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் நீர் கடலில் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 23ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சிங்கப்பபூரை சேர்ந்த எக்ஸ்பிரஸ் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த கப்பலில் இருந்த சரக்கு பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த அழகு சாதன பொருட்கள், ரசாயன பொருட்கள் தீயில் கருகி கடலில் கலந்தது. இந்த ரசாயன கழிவுகள் கடலில் கலந்தால் இலங்கையின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் பரவத் தொடங்கின. மேலும் கடலில் வாழ்ந்துவரும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமைகள், டால்பின்கள், திமிங்கலங்கள் இலங்கை மன்னார், கிளிநொச்சி, அம்பாறை, மட்டகளப்பு உள்ளிட்ட கடற்கரைகளில் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் மண்டபம் அடுத்த தோணித்துறை தெற்கு கடற்கரை பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் துர்நாற்றத்துடன் வீசி வருகிறது. மேலும் கடல் நீர் வெள்ளை நிறத்திலான நுறை ஏற்பட்டு வருகிறது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், இது குறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கூறுகையில்: அந்த நீர் கடல் நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதாகவும், இதுவரை எந்த விதமான எண்ணெய் கசியும் அதில் இருந்து பெறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். அதுவரை மீனவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.