/* */

எந்த இடம்னாலும் பரவாயில்லை போட்டுப் பார்க்கலாம் .. விவசாயிகள் தயாரா ?

மழை வறட்சி என்ற பாகுபாடின்றி பயிரிடக்கூடிய சிறுதானியம் குதிரை வாலி, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

HIGHLIGHTS

எந்த இடம்னாலும் பரவாயில்லை போட்டுப் பார்க்கலாம் .. விவசாயிகள் தயாரா ?
X

பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்.

வறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள் ,வௌ்ளப் பெருக்கு நிறைந்த வளம் குறைந்த நிலங்கள் மற்றும் பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில் பயிராகி நிறைவான மகசூல் தரக்கூடிய முக்கியமான சிறுதானியம் குதிரைவாலியாகும் .

குதிரைவாலி தானியமாகவும்,கால்நடைகளுக்கு தீவனப்பயிராகவும் பயனளிக்கிறது. தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் குதிரை வாலியினை பயிரிட்டு பயன் பெறலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

சிறுதானியங்களின் ஊட்டச்சத்து:பொதுவாக அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதம்,நார்ச்சத்து, நியாசின் தலாமின் மற்றும் ரிபோபிளேவின் ஆகிய வைட்டமின்களும், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியன அதிக அளவில் உள்ளன. சிறுதானியங்களில் அதிக அளவு இரும்புச்சத்து அதாவது 100 கிராமில் 18.60மில்லிகிராமும், நார்ச்சத்து 100 கிராமில் 13.6 கிராம் என்ற அளவிலும் சத்துக்கள் உள்ளன.

உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு: உடலுக்கு வலிமை சேர்க்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றது. ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகின்றது. உடல் பருமன் கொண்டவர்களின் உடல் எடை சீராகக் குறைகிறது. இதை உணவில் அதிக அளவில் சோ்க்கும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், எலும்பு வளர்ச்சிக்கும் நம் சராசரி ஆரோக்கியத்துக்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

பருவம் மற்றும் ரகங்கள் :குதிரைவாலி தானியாமானது 300 மி.மீ முதல் 350 மிமீ வரை மழை பொழியும் இடங்களில் கூட வளரக்கூடிய மானாவாரி பயிராக ஆடி (ஜுலை - ஆகஸ்ட்) மற்றும் புரட்டாசி (செப்டம்பர் -அக்டோபர்) பட்டங்களில் பயிரிடலாம்.அதிக விளைச்சல் தரக்கூடிய கோ-1 , மற்றும் கோ-2 ஆகிய ரகங்களை பயன்படுத்தலாம்.110 நாள் வயதுடைய குதிரைவாலி பயிர் ஒரு எக்டேருக்கு 1 டன் முதல் 2 டன் வரை மகசூல் தரவல்லது

நிலம் தயார் செய்தல்:நிலத்தை மூன்று முறை நன்றாக புழுதி உழவு செய்து களைகள் இல்லாதவாறு நிலத்தை பண்படுத்த வேண்டும் . நிலத்தை சமன் செய்து 3 மீ-க்கு 3மீ அளவுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும் .

விதையளவு:வரிசை விதைப்புக்கு ஒரு எக்டேருக்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோவும் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ.இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். விதை நேர்த்தி விதை மற்றும் மண்ணின் மூலமாக பரவும் நோய்களின் தாக்குதலை தடுப்பதற்காகவும் தாக்குதலைக் குறைப்பதற்காகவும் விதை நோ்த்தி செய்வது அவசியமாகும். டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவுக்கு 4 கிராம் அல்லது சூடோமோனஸ் ஒரு கிலோவுக்கு 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உயிர் உர நேர்த்தி விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை தலா 3 பாக்கெட் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கவும்.

உரமிடுதல்:ஒரு எக்டேர் நிலத்தில் அடியுரமாக 5-10 டன்கள் மக்கிய தொழு உரத்தினை கடைசி உழவின் போது இட்டு உழவேண்டும். பின்னர் 20 கிலோ தழை மற்றும் 20 கிலோ மணிச்சத்தினை அடியுரமாக விதைப்பின் போது இடவேண்டும். பின்னர் தரமுள்ள 20 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ தழைச்சத்தை 20-25 நாட்களுக்குள் மழை பெய்யும் போது மண்ணில் ஈரம் இருக்கும்போது மீண்டும் இடவேண்டும்.

களைக்கட்டுப்பாடு: விதைத்த 18-ம் நாள் ஒரு களையும்,45-ம் நாள் மற்றொரு களையும் எடுக்கவேண்டும்.

பயிர்களைதல் :முதல் களை எடுத்தவுடன் இரண்டு அல்லது மூன்று நாள்கள் ஊடு உழவு செய்து பயிர்களைக் களைந்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். பயிர் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் பொதுவாக பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதில்லை.மேலும் கரிப்பூட்டை நோயைத் தடுப்பதற்கு எதிர் உயிரிகளான சூடோமோனஸ், டிரைகோடொ்மாவிரிடி போன்றவைப்பயன்படுத்தி பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்ய வேண்டும் .

அறுவடை :கதிர்கள் நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்து களத்தில் காயவைத்து பின் தானியங்களை பிரித்தல் வேண்டும். பின் காற்றில் தூற்றி தானியங்களை தூசி நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு எக்டேரில் ஏறத்தாழ 1 டன் முதல் 2.5 டன் வரை மகசூல் கிடைக்கும்.4 முதல் 5 டன்கள் தீவன மகசூல் கிடைக்கும்.குதிரை வாலி மற்றும் சிறுதானியங்களை தானியங்களில் இருந்து அரிசியைப் பிரித்தெடுக்கதேவையான இயந்திரங்கள் தற்போது உள்ளது. இதன் மூலம் குதிரை வாலி அரிசி தயாரித்து சந்தைப்படுத்தலாம்.

இவ்வகை தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் தற்போது சிறு மற்றும் குறு தானியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் பயன்பாடும் அதிகரித்துள்ளது. குதிரைவாலி அரிசி மூலம் குதிரைவாலி பிரியாணி,பொங்கல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல், புட்டு போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். எனவே விவசாயிகள் குதிரைவாலி சாகுபடியை மேற்கொண்டு,தானும் பயன்படுத்தி பிறருக்கும் கிடைக்குமாறு சந்தைப்படுத்தி நல்ல லாபம் பெறலாம்.

Updated On: 23 Feb 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...