/* */

தனி மாவட்டமாக 49 -ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதுக்கோட்டை

42 பிர்க்காக்கள், 763 கிராமங்கள், 497 ஊராட்சிகள் என்று பெரிய மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது புதுக்கோட்டை

HIGHLIGHTS

தனி மாவட்டமாக 49 -ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதுக்கோட்டை
X

புதுக்கோட்டை மாவட்டமாக 1974 -ஆம் ஆண்டு உதயமானபோது அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட நினைவு தூண்( புதுகை  ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகம்).

புதுகை மாவட்டம் உதயமாகி 49 -ஆவதுஆண்டில்(ஜன.14) அடியெடுத்து வைக்கும் நிலையில், முன்னேற்றத்துக்கான பல்வேறு நிலைகளில் மாவட்ட மக்களிடம் அதிருப்தியே நிலவுகிறது.

ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து 1974ம் ஆண்டு ஜனவரி 14 -ஆம் தேதி தமிழகத்தின் 15வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது. புதிய மாவட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடக்கி வைத்தார். மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4 ஆயிரத்து 661 சதுர கிலோ மீட்டர். தற்போதைய மக்கள் தொகை சுமார் 18 லட்சம் என கூறப்படுகிறது..

மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி என்று 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. புதுக்கோட்டை, அறந்தாங்கி என்று 2 நகராட்சிகளும், புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் என்று 3 வருவாய் கோட்டமும், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி என்று 8 பேரூராட்சிகளும், மணமேல்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், குளத்தூர், கறம்பக்குடி, விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டை ஆகிய தாலுகாக்களும் உள்ளன.

அன்னவாசல், அரிமளம், கந்தர்வகோட்டை, குன்றாண்டார் கோவில், பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல் குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் என்று 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேலும் 42 பிர்க்காக்கள், 763 கிராம ங்கள், 497 ஊராட்சிகள் என்று பெரிய மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இங்கு உலகப் புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு அமைந்துள்ள குடுமியான்மலை, ஓவியத்திற்கு பெயர் பெற்ற சித்தன்ன வாசல், மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி கோயில், திருமயம் கோட்டை என்று ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு இங்கே பஞ்மில்லை.

புதுகை மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயே மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் வெட்டப்பட்டன. இதில் கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயிகள் விவசாயத்துக்கும், பொதுமக்கள் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர்.

மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னியாறு, பாம்பாறு, அம்புலி ஆறு ஆகியவை ஓடுகின்றன. ஆனால் மழைக்காலங்களில் மட்டுமே ஒன்றிரண்டு மாதங்கள் இந்த ஆறுகளில் தண்ணீர் ஓடும். அதேநேரத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களில் கல்லணை காவிரி கால்வாய்களும் ஓடுகின்றன. இவற்றிலும் போதிய அளவு தண்ணீர் வராததால் விவசாய பரப்பளவும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.

மாவட்டம் உதயமாகி 49 ஆண்டுகள் ஆகியும் பழமை மாறாமல் அப்படியே உள்ளது. இன்னும் எந்த வளர்ச்சியும் பெறவில்லை என்று மாவட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர முயற்சியின் காரணமாக அரசு மருத்துவ கல்லூரிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதியளித்தால் புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைத்தது..முன்னாள் எம்எல்ஏ வைரமுத்துவின் தீவிர முயற்சியின் காரணமாக மேலும் அப்போது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருமயம் தொகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை ஒரளவு குறைந்துள்ளது.

ஆனால் , காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் கடந்த ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்ட விவசாயிகளின் ஏறத்தாழ 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் பணிகளில் நீடித்து வரும் தொய்வின் காரணமாக குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறுமா என்ற சந்தேகம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது .

அதேபோல் ராமநாதபுரம் கரூர் தொகுதி எம்.பிக்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வருவது கானல் நீர் என்றே கூறலாம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் பெருகியதை தடுத்து நிறுத்தாதது, ஷேர் ஆட்டோ அல்லது சென்னையை போல் மினி பஸ் இயக்குதல் போன்றவை மாவட்ட மக்களின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

மாவட்டத்தை நினைவு கூரத்தக்க வகையில் உருவான நினைவு தூண் தற்போது நீதிமன்றத்தின் நேரடி பார்வையால் முன்பிருந்த அவல நிலைமை மாறியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நகர மக்கள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை நகரின் நான்கு திசைகளிலும் உள்ள 16 வீதிகள் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. கட்டடங்கள்தான் பெருகியுள்ளன. நூற்றாண்டு கண்ட நகராட்சி என்று சொல்கின்றனர். ஆனால் நகராட்சிக்குரிய எந்த வசதியும் இங்கு இல்லை. தெரு விளக்கு, நடை பாதை, சாலை வசதிகள் மோசமாக உள்ளன. புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.

20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் எங்கள் பகுதி உள்ளது. ஆனால் மக்கள் தொகை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வீடுகள் பெருகி வருகின்றன. இதற்கேற்ப அடிப்படை வசதிகள் மட்டும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தெருவிளக்கும் பல இடங்களில் எரிவதே இல்லை. இதனால் கிராமப்புறங்களில் வசிப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

ராஜகோபாலபுரம் ரயில் நிலையம் ஒன்றுதான் கொஞ்சம் நவீனமாகியுள்ளது. கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட் டுள்ளன. நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இங்கு இயங்கி வந்த கேண்டின் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது.

ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப் பட்டுள்ள குடிநீர் மேடைகள் சேதமடைந்துள்ளன. குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை. ரயிலில் வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்கோ, நகரின் பிற பகுதிகளுக்கோ செல்ல வேண்டுமானால் ஆட்டோவில்தான் பயணம் செய்ய முடியும். பஸ் வசதி கிடையாது. ரயில் வரும் நேரங்களில் முறையாக பஸ்களை இயக்கவில்லை என்பது பெருங்குறை.

நகராட்சிக்குரிய எந்த வசதியும் புதுகையில் இல்லை. பேரூராட்சி, ஊராட்சிகளில்கூட முக்கிய சாலைகளில் சோடியம் விளக்குகள் அமைத்துள்ளனர் ஆனால் புதுகை நகரில் பல சாலைகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் வெளிச்சம் கிடைக்கவில்லை.

உயர்மின் கோபுர விளக்குகள் நிறுவப்பட்டும் அதனை சரிவர பராமரிப்பின்றி போய் கொண்டிருப்பதால் பாதி நாட்கள் விளக்குகள் எரிவது கிடையாது. பூங்காக்கள் வேலிக்கருவைகள் வளரும் இடமாக மாறியுள்ளளன.

மாவட்டத்தில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் விவசாயத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் முந்திரி அதிக அளவில் விளைகிறது. முந்திரி தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாக ஏராளமானோரும் பயனடைவர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம்.

பஸ் நிலைத்தில் இருந்து பாலன் நகர் எங்கள் பகுதிக்கு வர ஆட்டோவில் 150 முதல் 200 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். மற்ற நகராட்சிகளில் ஷேர் ஆட்டோ இயக்கப்படுகிறது. ஆனால் நூற்றாண்டு கண்ட நகராட்சியில் ஷேர் ஆட்டோ, உள்வட்ட சுற்று பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. நகரின் முக்கிய இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் வசதி செய்ய வேண்டும். கருவேப்பிலான், திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை

மாவட்டம் உதயமான நாளில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள், கலாசசார போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

எம்பி தொகுதியும் போச்சு..

தொகுதி சீரமைப்பினால் , புதுகை எம்பி தொகுதியும் பறிபோனது. இதனால் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் அருகில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளுடன்இணைக்கப்பட்டன.

அறந்தாங்கி தொகுதி மக்கள் கோரிக்கைகளுக்காக தங்கள் எம்பியை சந்திக்க 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தஞ்சை-புதுக்கோட்டை இரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாதது. பெல் தொழிற்சாலை தவிர குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் எதுவும் வராதது போன்ற மாவட்ட வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது போன்றவை பொதுமக்களின் மனக்குறையாகவே உள்ளது.


Updated On: 13 Jan 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது