புதுக்கோட்டையில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி
புதுக்கோட்டையில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நகராட்சி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இதில் இருந்து வசூல் செய்யப்படும் வாடகை மற்றும் வரி பாக்கி ஆகியவை கொண்டு நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் கடந்த பல வருடங்களாக நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள் முறையாக வாடகை செலுத்தாமல் வரி பாக்கி கட்டாமலும் இருப்பதால் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கோடிக்கணக்கில் வாடகை பாக்கி மற்றும் வரி பாக்கி இருந்து வருகிறது.
இதனால் நகராட்சியில் பணிபுரியும் நகராட்சி அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் புதிதாக நகராட்சி தேர்தல் நடைபெற்று புதிய தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு வாடகை மட்டும் வரி பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை, மேல ராஜவீதி, கீழராஜவீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி கடைகளுக்கு வரி மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருவதால் பலர் அச்சத்தில் வரியை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தெற்கு சந்தப்பேட்டை பகுதியில் இரும்பு கடை மரக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் 3 லட்சத்திலிருந்து 8 லட்ச ரூபாய் வரை வாடகை மட்டும் வரி பாக்கி வைத்துள்ளதால் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் மட்டும் 75 லட்ச ரூபாய் வரை வரி மட்டும் வாடகை பாக்கி கடைக்காரர்கள் வைத்துள்ளார்கள் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள் வரி மற்றும் வாடகை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லையெனில் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது