புதுக்கோட்டை கேஎல்கேஎஸ் நகரில் சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
தொடர்ந்து 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது
HIGHLIGHTS
புதுக்கோட்டை கேஎல்கேஎஸ் நகரில் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி.
புதுக்கோட்டைநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.புதுக்கோட்டைநகராட்சி சார்பிலும் தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணியில் நகராட்சி அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகமேல ராஜவீதி கீழராஜவீதி வடக்கு ராஜவீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல வருடமாக தூர் வாராமல் கிடந்த வரத்து வரிகள் மற்றும் சாக்கடைகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனாலும், புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கேஎல் கேஎஸ் நகர் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக, நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கின்றனர்.