மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆய்வு
RTO Fine Check -ஆபத்து விளைவிக்கும் வகையில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிடப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது
HIGHLIGHTS
RTO Fine Check -புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிடப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 65 ஆயிரத்து 562 விபத்துகள் ஏற்பட்டு 16 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்தனர். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் அதிகம்.வேகமான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் போன்றவற்றால் மோட்டார் வாகனங்களின் வளர்ச்சி முன் நிகழ்ந்திராத புரட்சியினை இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில பத்தாண்டுகளில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிகரித்துள்ள நோயுறும் தன்மை மற்றும் இறப்பு போன்றவை உலகளவில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் போக்குவரத்து, சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், இது 65 விழுக்காடு சரக்கு போக்குவரத்து மற்றும் 87 விழுக்காடு பயணிகள் போக்குவரத்தை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாலைப் போக்குவரத்து ஆண்டொன்றிற்கு 7 முதல் 10 சதவீதம் விழுக்காடு வளர்ந்து வரும் நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டொன்றிற்கு 12 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், பரந்து விரிந்த சாலை தொடரமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
வேகமான மக்கள் தொகை வளர்ச்சியுடன் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகள், மோட்டார் வாகனங்களின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. இவை, சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சாலை விபத்துக்கள் மனிதனால் ஏற்படுத்தக்கூடிய சோகமான நிகழ்வாக இருப்பதுடன், அவை நொடிப்பொழுதில் ஏற்படுகிறது. மனிதர்களின் அகால மரணம் மற்றும் துயரங்களை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்துத் துறை கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளை கண்டிப்புடன் செயல்படுத்துதல்,அதிக சுமை ஏற்றிச் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியினை பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தல்,வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்களை சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல், சுற்றுலா சீருந்து மற்றும் மேக்ஸிகேப் ஓட்டுநர்களின் பணி நேரத்தினை ஒழுங்குபடுத்துதல். போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சரக்கு வாகனங்களில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் முன்புறம் மற்றும் பின்புறம் நீட்டிக் கொண்டு இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிடப்பொருட்கள் ஏற்றிச்செல்வது தொடர்பாக இன்று ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது ஒரு இலகு ரக சரக்கு வாகனம் இரும்பு கம்பிகளை பின்புறம் மற்றும் முன்புறம் அதிக நீளமாக ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏற்றி சென்றதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டு நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பொதுச்சாலையில் ஆபத்தான முறையில் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அதிக நீளமாக இரும்புக்கம்பிகள், மரங்கள் மற்றும் இதரப்பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடாது. மேலும், சரக்கு வாகனங்களின் சரக்கு ஏற்றும் பகுதியில் பொதுமக்களை ஏற்றிச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனையின் போது மேல் தெரிவித்த குற்றங்கள் கண்டறியப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்து வாகன அனுமதிச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமத்தினை இரத்து செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ப.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2