புதுகை தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்திய எம்.எல்.ஏ
புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பாராட்டு விழா நடத்தினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள பழமை வாய்ந்த ஜவுளிக்கடையை இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டிடம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 20 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை உயிரை பணையம் வைத்து, 8 பேரை காயமடைந்த நிலையில் மீட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா. காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சைகள் அளிப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.
இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், 8 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்களை பாராட்டும் விதத்தில், அவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா பாராட்டினார். திமுக மாவட்ட பொருளாளர் செந்தில், நகர செயலாளர் நைனா முகமது, நகரத் துணைச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் உடனிருந்தனர்.