இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமணம்
ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த மணமக்களுக்கு திருமணம் நடத்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
HIGHLIGHTS
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 3 ஜோடிகளுக்கு புதுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 3 ஜோடிளுக்கு திருமணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா (11.09.2023) தலைமை வகித்து நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் பொருளாதாரம் உயரும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் திருக்கோயில்களில் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த மணமக்களுக்கு திருமணங்கள் நடத்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 3 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, ரூ.50,000 மதிப்பிலான 4 கிராம் திருமாங்கல்யம், மணமகன், மணமகள் ஆடை, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, 2 தலையணைகள், பாய், 2 கைகடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் 20 நபர்களுக்கு உணவு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மணமக்களின் வாழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒளியேற்றி வைத்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத் தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ்பாபு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;.