உதகையில் வியக்கவைக்கும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மலர் கண்காட்சி!
உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மூலம் கொரோனாதடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
HIGHLIGHTS
கோவிட் பெருந்தொற்று காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கமாக நடைபெறும் வருடாந்திர மலர்க் காட்சி இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் நடைபெறவில்லை.
இருந்தாலும் தாவரவியல் பூங்காவில் வருடாந்திர மலர்க் காட்சிக்காக நடவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வந்த லட்சக்கணக்கான மலர்கள் தற்போது பூத்து குலுங்கி மலர் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பால்ஸம், பெட்டுனியா, கிளேடியோலை, ஆஸ்டர், ஓரியன்டல் லில்லி என 25 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் பூத்து குலுங்கும் வண்ண பூக்கள் மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ரம்மியமாக காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பு ஊசி போடுவோம் என்ற வாசகத்தை 2500 மலர் தொட்டிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தங்களது 3 மாத கால கடின உழைப்பினால் பூத்து குலுங்கும் மலர்களை காண பார்வையாளர்கள் இல்லாத நிலையில் மலர்களை பராமரித்து வந்த பூங்கா ஊழியர்கள் காட்சி படுத்தப்பட்ட மலர்த் தொட்டிகள் முன் நின்று புகைப்படம் எடுத்து தங்களை தாங்களே ஆறுதல் படுத்திக் கொண்டனர்.
இது குறித்து தோட்டக்கலை இணை இயக்குநர் கூறுகையில் லட்சகணக்கான மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் பூத்துள்ளது கொரோனா பற்றி விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்துவது பற்றி மலரலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. பூக்கள் தொட்டிகளில் இருந்து விழும் வரை இந்த விழிப்புணர்வு அலங்காரம் இருக்கும் என தெரிவித்தார்.