உக்ரைனிலிருந்து நீலகிரிக்கு திரும்பி வந்த 5 மாணவர்கள்: பெற்றோர்கள் மகிழச்சி
0423-2444013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் கல்வி கற்றுவரும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், அங்கு குடியேறி வசித்து வருபவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 20 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரபெற்றுள்ளது. இதில் 5 பேர் தமிழகத்துக்கு வந்தனர். கோத்தகிரி தாலுகாவில் 2 பேர், குன்னூர் தாலுகாவில் ஒருவர், உதகை தாலுகாவில் ஒருவர், பந்தலூர் தாலுகாவில் ஒருவர் என 5 பேர் தாயகம் திரும்பினர். பிற நபர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதை தவிர வேறு எவரேனும் மாணவர்களோ, குடியேறியவர்களோ இருப்பின் மாணவர்கள் மற்றும் குடியேறியவர்கள் பெயர், பாஸ்போர்ட் எண், உக்ரைனில் வசித்து வரும் இருப்பிடம், கல்லூரி முகவரி, அங்கு உபயோகித்து வரும் செல்போன் எண், பணியில் இருப்பின் அதன் விவரம், தமிழ்நாடு வசிப்பிட முகவரி, மின்னஞ்சல் முகவரி, உறவினரின் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உதகை கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இல்லையெனில் collrnlg@nic.in அல்லது bsectionooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் 0423-2444013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.