வெண்ணந்தூர் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: அமைச்சர் துவக்கம்
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரயோசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், ஊராட்சியில் ஒன்றியப் பொது நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும், ஒ.செவுதாபுரம் பஞ்சாயத்து ஜி.ஏ.நகர் பகுதியில் ஒன்றியப் பொது நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
அதைனைத்தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 24 கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 28 பேர், தூய்மைக் காவலர்கள் 94 நபர்கள் என மொத்தம் 102 பேருக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
மேலும் தூய்மை பாரத இயக்கத்தன் மூலம், அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், ரூ.5.48 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைத் திட்டத்தினை (பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம்) அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். அலவாய்ப்பட்டி ஊராட்சியில் பொது மக்களிடமிருந்து, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிலோ 1க்கு ரூ. 8 வீதம் பெறப்பட்டு இந்த மையத்தில் மறு சுழற்சி செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கம்மாள், வட்டார வளர்ச்சி அலுவர்கள் அ.பிரபாகரன், நாகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.