சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் சென்றன
நாமக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் அனைத்து கட்சியினர் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் குலுக்கல் நடைபெற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட குலுக்கலில் 2049 வாக்குச்சாவடிகளுக்கு 2463 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2463 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2667 VVPAT எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதன்பின் இயந்திரங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.