தேசிய கராத்தே போட்டியில் வெற்றி: நாமக்கல் மாணவருக்கு பாராட்டு
தேசிய கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற, நாமக்கல் மாணவர் நிஸ்வந்த் ரவிக்கு, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.
HIGHLIGHTS
கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் பெற்ற, ஹரியானா ஒலிம்பிக் அசோசியேசன் இணைந்து நடத்திய, தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா பல்கலையின், உள்விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் இருந்து, சுமார் 1600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து 146 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், தமிழகம் 17 தங்கப்பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 20 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 43 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. தேசிய அளவிலான போட்டியில், முதன்முறையாக தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில கராத்தே சங்க தலைவர் சாய் ப்ரூஸ், செயலாளர் மோகன் தலைமையில் ஆசிய நடுவர்கள் மற்றும் சீனியர் மாஸ்டர்கள் அறிவழகன், பீட்டர் பால் ஆகியோர் மாணவர்களை வழி நடத்திச் சென்றனர். இதில் நாமக்கல் அட்வெஞ்சர் அகாடமி கராத்தே மாஸ்டர் தங்கம் தலைமையில் கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் அட்வெஞ்சர் அகாடமி மாணவர் நிஸ்வந்த் ரவி தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி, கட்டா பிரிவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர் நிஸ்வந்த் ரவியை கொமதேக பொதுச்செயலாளர், ஈஸ்வரன் எம்எல்ஏ, நாமக்கல் எம்.பி. சின்ராஜ், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் தேவராசன் மற்றும் கராத்தே பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.