பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க வாஸ்து பூஜை
பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 165 அடி உயரம், 5 நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை நடைபெற்றது.
HIGHLIGHTS
பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 165 அடி உயரம், 5 நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு தினசரி வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோயிலைப் புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து, கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், இக்கோயிலில் 165 அடி உயரத்தில், 5 நிலை ராஜகோபுரம் அமைத்து திருப்பணிகள் செய்திட ரூ. 1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
இதையொட்டி, ராஜகோபுரம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது. கடந்த ஏப். 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் திருப்பணியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக வாஸ்து பூஜை விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது.
சேந்தமங்கலம் அட்மா குழு தலைவர் அசோகன், பஞ்சாயத்து தலைவர் அமுதா கிருஷ்ணன்,பரம்பரை அறங்காவலர்கள் முருகபாண்டியன்,சத்தீஸ்வரன், சுற்றுலா மற்றும் சமூக ஆராய்ச்சியாளர் பிரனவ்குமார் மற்றும் கோயில் குடிப்பாட்டுக்காரர்கள் திரளானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.