சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ஏற்பாடு
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் சேவையை மத்திய இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் முழுமையாக ஏசி வசதி செய்யப்பட்டு அதிவேக ரயில் ஆகும். இந்த ரயில்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கதிமான் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுடன் இந்தியாவின் வேகமான ரயில்களில் ஒன்றாகும்.
மேலும், இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இந்த ரயில்கள் அதிக முன்னுரிமையைப் பெறுகின்றன. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆட்டோமேட்டிக் பிளாஸ்டிக் கதவுகள், மற்றும் நவீன சொகுசு இருக்கைகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் நவீன டாய்லெட் வசதிள் கொண்டதாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மதுரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கும் சென்னைக்கும் இடையே நேரடி மற்றும் வேகமான இணைப்பை வழங்குகிறது.
இந்த ரயில் சென்னையில் இருந்து செல்லும்போதும், மதுரையில் இருந்து சென்னை வரும்போதும் தாம்பரத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்று ரயில் பயணிகளும், சாப்ட்வோர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களும், பொதுமக்களும் மத்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முருகனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம் அமைச்சர் முருகன் முன்வைத்தார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வேத்துறை அமைச்சர் அனுமதி வழங்கினார்.
இதையொட்டி சென்னை தாம்பரத்தில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் சேவை துவக்க விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி., முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் முருகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தாம்பரத்தில் நிறுத்தத்தின் தொடக்க அறிமுகத்தை முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று சென்றது. தொடர்ந்து இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. தாம்பரம் மேயர் வசந்தகுமாரி. எம்எல்ஏ ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.