கொரோனா பணியில் அரசுடன் கரம் கோர்க்க அதிமுக தயார்: மாஜி அமைச்சர் தங்கமணி
கொரோனா தடுப்புப்பணியில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற அதிமுக தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சரான தங்கமணி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் தங்கமணி எம்எல்ஏ, ப.வேலூர் தொகுதி அதிமுக எம்எல் சேகர் ஆகியோர், மாவட்ட கலெக்டர் மெகராஜை நேரில் சந்தித்து, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உரியை நடவடிக்க எடுக்க வேண்டி மனுவை அளித்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமானவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதி இல்லை.
ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாய்ப்புள்ள இடங்களில் ஆக்சின் படுக்கை வசதியுடன் புதிய கெரோனா சிகிச்சை மையங்களை துவக்க வேண்டும்.
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை. எனவே இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மாவட்ட அதிமுக சார்பில் தற்போது குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம்.
மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்க தயாராக உள்ளோம். மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் அதிமுக மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் மற்றும் உபகரனங்களை கொள்முதல் செய்துள்ளது. விரைவில் அவற்றை கலெக்டரிடம் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.