நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்
மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றும். இன்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.