நாமக்கல்லில் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்: அலறியடித்து வெளியே வந்த மக்கள்
நாமக்கல் நகரில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் 50 லட்சம் மதிப்பலான டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
HIGHLIGHTS
நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள ஆண்டவர் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பர்மரில் இருந்து செல்லும் மின் கம்பி, அரசு கேபிள் டிவி ஒயரின் மீது உரசியது.
அப்போது உயர்மின் அழுத்தம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த டிவி, வாசிங்மெஷின், குளிர்சாதன பெட்டி, கணினி உள்ளிட்ட பொருட்கள் வெடித்துச் சிதறியது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஒடிவந்தனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களுக்கும் கேபிள் டிவி நிறுவனத்திற்கும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகி உள்ளது. ஏற்கெனவே மின்கம்பியும் கேபிள் டிவி ஒயரும் உரசி தீப்பிடிப்பதாக மின்வாரிய அலுவலகத்திற்கும் கேபிள் டிவி நிறுவனத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, ஒரே நேரத்தில் பல வீடுகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதமாகி உள்ளன. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண வேண்டும் என்றனர்.