நாமக்கல் அருகே கார், லாரி மோதி விபத்து: பெண் உயிரிழப்பு
நாமக்கல் அருகே கார், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சேலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 62). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி கோகிலவாணி (52), மகள் காயத்ரி (35) மற்றும் பேரன் சர்வேஷ் (6) ஆகியோருடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண, காரில் மதுரைக்கு சென்றனர்.
மதுரையில் நிகழ்ச்சியை பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் நோக்கி காரில் சென்றனர். இரவு நேரத்தில் நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோகிலவாணி படுகாயம் அடைந்தார். மேலும் ராஜேந்திரன், காயத்ரி மற்றும் சர்வேஷ் ஆகியோரும் காயம் அடைந்தனர்.
நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் கோகிலவாணி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ராஜேந்திரன், காயத்ரி, சர்வேஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.