பலபட்டறை மாரியம்மன் கோயில் நிலம் அளவீடு செய்ய கோரிக்கை
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பக்தர்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என திரளான பக்தர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் பக்தர்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர் அதில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இது அனைத்த சமூகத்தினரும் வழிபாடு செய்யும் கோயிலாகும். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் துவங்கி ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறுவது சிறப்பு ஆகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது கோயிலில் வடக்குப்புறத்தில் இருந்த காலி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கும்பாபிசேக விழா நடைபெற்றது. பின்னர் தனியார் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், அந்த சுவர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
இதையொட்டி அரசு அதிகாரிகள் முன்னிலையில் திருக்கோயிலின் வடக்குப்புற சுவர் கடந்த ஜன. 24ம் தேதி இடிக்கப்பட்டது. தற்போது சிறப்பு வாய்ந்த கோயிலின் ஒரு பகுதி சுவர் இல்லாமல், திரையிட்டு மூடப்பட்டுள்ளதால், பக்தர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர். மாரியம்மன் கோயிலுக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, பக்தர்கள் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தன நிலம் எவ்வளவு என்பதை, பழைய ஆவணங்களின்படி கணக்கிட்டு, அளவீடு செய்து, மார்க்கிங் செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வசதியாக இருக்கும், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்காது என தெரிவித்துள்ளளனர்.