கொல்லிமலையில் நாளை ஒரி விழா துவக்கம்
கொல்லிமலையில் நாளை ஒரி விழா துவங்குவதை முன்னிட்டு விழாவிற்கு வருபவர்களுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்
HIGHLIGHTS
கொல்லிமலையில் நாளை துவங்கும் ஓரி விழாவிற்கு, வருபவர்களுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை இயற்கை சூழல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்குச் செல்ல 77 குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் கொண்டு மலைப்பாதையின் வழியாக செல்லவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலையில் உள்ள அருவிகளிலும், ஆற்றிலும் புனித நீராடி, அறப்பளீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர வாகனம் மற்றும் கார், வேன்களில் கொல்லிமலைக்கு வருகை தருவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் ஆடி 17, 18 தேதிகளில் கொல்லிமலையில் ஓரி விழா நடைபெறும். இந்த ஆண்டும் ஆக.2, 3 தேதிகளில் ஓரி விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது. ஓரி விழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும், சமூக அமைப்புகளும் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
இதையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களுக்கு ஆக. 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கொல்லிமலைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஆக.2 மற்றும் 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், அதிகப்படியான மக்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே, விழாவிற்கு வெளிமாவட்டங்களில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும், வரும் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில், வாகனத்தின் விபரம் மற்றும் கலந்து கொள்பவர்களின் விபரம் மற்றும் வரும் பாதையின் விபரம் போன்ற முறையான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வரக்கூடிய அமைப்புகளை சார்ந்தவர்கள் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதன்சந்தை, நைனாமலை, துத்திக்குளம், காரவள்ளி சோதனை சாவடி வழியாக மட்டுமே மலைக்கு செல்ல வேண்டும். பிற வழிகளில் செல்ல அனுமதியில்லை.
வல்வில் ஓரி விழா முடித்து கீழே இறங்குபவர்கள் செம்மேடு, செங்கரை, முள்ளுக்குறிச்சி சோதனை சாவடி வழியாக சேந்தமங்கலம் பிரிவு ரோடு, அனைப்பாளையம் புறவழி சாலை வழியாக சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றடைய வேண்டும்
நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் சுற்றுலா ஊர்திகளில் வரக்கூடாது. சட்ட விதிகளுக்கு உட்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் வரவேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும்.
வாகனத்தில் வருபவர்கள் யாரும் அமைப்புகள் சார்ந்த கொடிகள், போஸ்டர் மற்றும் உருவப்படம் ஆகியவற்றை வாகனத்தில் கட்டியோ, கையிலோ கொண்டு செல்லக்கூடாது. தங்களது வாகனத்தில் ஒலிபெருக்கி உபயோகிக்கக் கூடாது. மது மற்றும் போதை சம்பந்தப்பட்ட பொருட்களையோ, ஆயுதங்களையோ கொல்லிமலைக்கு கொண்டு செல்லக் கூடாது.
விழாவிற்கு வரும் அமைப்புகளை சார்ந்தவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் வர வேண்டும். அனுமதி பெற்று மலைக்கு மேலே செல்லும் வாகனங்கள் 3 மணி நேரத்தில் கீழே இறங்கி விட வேண்டும்.
விழா மலை உச்சியில் நடப்பதால் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் அதிவேகமாகவோ அஜாக்கிரதையாகவே ஓட்டக் கூடாது. விழாவிற்கு வருபவர்கள் யாரையும் தாக்கி பேசவோ, முழக்கங்கள் செய்யவோ கூடாது.
அரசியல் கட்சி, ஜாதி மற்றும் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்பை சார்ந்த தலைவர்களையோ மற்றும் அலுவலர்களையோ சுட்டிக்காட்டியோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கம் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. இந்த அறிவுரைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.