நாமக்கல் மாவட்டத்தில் 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
நாமக்கல் மாவட்டத்தில் 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக அரசின் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் தேவை அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது வரை 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 29,620 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யுடிஐடி) விண்ணப்பம் பெறப்பட்டு, அதில் 15,838 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது 55 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டமான நலவாரியய உறுப்பினராக, 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 29,805 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.1500/- லிருந்து ரூ.2000/- உயர்த்தப்பட்டு, 4,357 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள கூடுதலாக மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தில் 40 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு ரூ.1,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ரூ.3.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் 197 பார்வையற்றோருக்கும், 75 காது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 45 அறிவுசார் குறைபாடுடையோருக்கும் மற்றும் 98 கை, கால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆக மொத்தம் 415 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
படித்த வேலை வாய்ப்பற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு ரூ.10,32,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, இதுவரை 84 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.78,100/- வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட, சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.10,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,83,332/- வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.