நாமக்கல் சிறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் வேளாண் இயந்திரங்கள்
நாமக்கல் சிறு விவசாயிகள் வாடகை இல்லாமல் வேளாண் இயந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி டாபே நிறுவனத்தின் ஜெ-பார்ம் மூலம் மாஸே பர்குசன் எய்சர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் வழங்கப்படும்.
இதற்கு 2 ஏக்கர் அல்லது அதற்கு குறைவான விவசாய நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். 60 நாட்களுக்கு வாடகையின்றி இந்த இயந்திரங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பாக டிராக்டர் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.
உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை மைய சேவை மூலம் இயந்திரங்கள் வாடகை விடுதல் சேவையைப் பயன்படுத்தி தேவையான வேளாண்மை இயந்திரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 1800-4200-100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.