நாமக்கல்: ரெட் கிராஸ் சார்பில் கூடுதலாக இலவச அமரர் ஊர்தி சேவை!
நாமக்கல் மாவட்டத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல ஏதுவாக, ரெட்கிராஸ் சார்பில் கூடுதலாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழ்நாடு சுகாதார சேவைத் திட்டத்தின் சார்பில், அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சாலை விபத்துகளிலும் இறந்த நபர்களின் உடல்களை, மயானத்திற்கோ அல்லது சம்மந்தப்பட்டவரின் இல்லத்திற்கோ தமிழகம் முழுவதுமாக இலவசமாக அனுப்பி வைக்கும் பணியை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செய்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இத்திட்டத்திற்கு, நாமக்கல் மாவட்டத்தில் 3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 2012 முதல், மே 2021 வரை 9,134 உடல்கள் இந்த வாகனங்களில் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது நிலவிவரும் கொரோனோ தொற்று காலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இணை நோய் மற்றும் வயது முதிர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து நாமக்கல் மற்றும் வெளியூர்களில் இருந்து, மின் மயானங்களுக்கு இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டது. இதை தவிர்க்கவும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவும், நாமக்கல் கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், நாமக்கல்லுக்கு கூடுதலாக ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில், தனித்தனியாக 6 உடல்களை எடுத்துச்செல்ல முடியும். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல எவ்வித கட்டணமும் இன்றி, இந்த ஊர்தி இயக்கப்படும். இவ்வாகனத்தை அழைக்க, 155377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.