நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுவினர் விருப்பு மனு தாக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனுகள் பெறப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களுக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்எல்ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, போட்டியிட விரும்பு அதிமுவினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.
பின்னர் பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளும், 19 டவுன் பஞ்சாயத்துக்களும் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பு மனுக்கள் பெறப்படுகின்றன.
ஏற்கனவே கடந்த 2019ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது சிலர் அதற்கான கட்டணம் செலுத்தி அதை திரும்பப்பெறவில்லை. அவர்கள் தற்போது போட்டியிட விரும்பினால் மீண்டும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை. தற்போதுள்ள திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்.
நாமக்கல் பகுதியில் உள்ள உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களை திமுகவினர் பணத்தைக் கொடுத்தும், மிரட்டியும் தங்கள் கட்சிக்கு இழுக்கின்றனர். இதனால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி மாறினாலும், ஒரு தொண்டர் கூட கட்சி மாறவில்லை. எருமப்பட்டி பஞ்சாயத்து யூனியனில் மொத்தமுள்ள 15 ஒன்றிய கவுன்சிலர்களில் 10 பேர் அதிமுகவில் இருந்தனர்.
ஏற்கனவே நடைபெற இருந்த தலைவர் தேர்தலை, அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தனர். தற்போது ஒரு கவுன்சிலரை மிரட்டி திமுகவிற்கு இழுத்துவிட்டனர். 9 கவுன்சிலர்கள் அதிமுகவில்தான் உள்ளனர். எனவே வருகிற 29ம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றால் அதிமுக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், ஆவின் சேர்மன் ராஜேந்திரன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செல்வகுமார், முன்னாள் எம்எல்ஏ கலாவதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மயில்சுந்தரம், நாமக்கல் நகராடர்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர், சந்திரன், வக்கீல் கோபிநாத், வைரம் தமிழரசி, நிலவள வங்கி தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.